‘இந்தியா’ : மோடிக்கு ராகுல் பதில்!

Published On:

| By Monisha

pm modi calls india alliance as PFI

இந்தியா கூட்டணியை பிஎஃப்ஐ அமைப்புடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேசியதற்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மணிப்பூர் விவகாரத்தால் தொடர்ந்து முடங்கி வருகிறது. இன்றும் நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகளின் அமளியால் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பாஜக மற்றும்  எதிர்க்கட்சி கூட்டணி எம்.பிக்கள் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. அதற்காக நாம் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறோம். நாட்டின் பெயரை மட்டும் பயன்படுத்தி மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துகிறார்கள். கிழக்கிந்திய கம்பெனி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, இந்தியா முஜாகிதீன் போன்ற அமைப்புகளும் இந்தியா பெயரை பயன்படுத்துகின்றன.

எதிர்க்கட்சிகள் விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளன. அவர்களது செயல்பாடுகள் தொடர்ந்து எதிர்க்கட்சிகளாக இருப்பதையே காட்டுகிறது” என்று விமர்சித்தார்.

இந்நிலையில் இந்தியா கூட்டணியை விமர்சித்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,

“நீங்கள் எங்களை என்ன வேண்டுமானாலும் சொல்லி அழையுங்கள் மிஸ்டர் மோடி. நாங்கள் இந்தியா தான். மணிப்பூரை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும், ஒவ்வொரு பெண் மற்றும் குழந்தையின் கண்ணீரை துடைக்கவும் நாங்கள் உதவுவோம்.

மணிப்பூர் மக்கள் அனைவருக்கும் அன்பையும் அமைதியையும் திரும்பக் கொண்டு வருவோம். மணிப்பூரில்  ‘இந்தியா’ என்ற எண்ணத்தை  உருவாக்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை!

செந்தில் பாலாஜி வழக்கு முடித்து வைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share