வாக்கு திருட்டு என்ற அணுகுண்டுக்குப் பிறகு, இப்போது ஹைட்ரஜன் குண்டு வரப்போகிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.
இதைத்தொடர்ந்து பீகாரில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் வாக்குரிமை யாத்திரை மேற்கொண்டார்.
அவரது இந்த நடைபயணத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
அவரது யாத்திரை இன்றுடன் (செப்டம்பர் 1) நிறைவடையும் நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள டாக் பங்களா ரவுண்டானவில் பேசிய ராகுல் காந்தி, “பீகார் எப்போதும் புரட்சியின் பூமியாக இருந்து வருகிறது. வாக்கு திருட்டு என்பது வெறும் வாக்குகள் மட்டும் திருடப்படுவது அல்ல. அது உரிமைகள் திருட்டு, இடஒதுக்கீடு திருட்டு, வேலைவாய்ப்பு திருட்டு, கல்வி திருட்டு ,ஜனநாயக திருட்டு, இளைஞர்களின் எதிர்கால திருட்டு” என்று ஆவேசமாக பேசினார்.
மேலும் அவர், “பாஜகவினரே… தயாராகுங்கள். வாக்கு திருட்டு என்ற அணுகுண்டுக்குப் பிறகு, இப்போது ஹைட்ரஜன் குண்டு வரப்போகிறது. உங்கள் வாக்கு திருட்டு குறித்தான உண்மையை முழு நாட்டிற்கும் முன்பாக அம்பலப்படுத்துவோம். மோடி ஜி தனது முகத்தை இனி மக்கள் முன் காட்ட முடியாது. ‘வாக்கு திருட்டு’ நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக எம்.பி. ரவி சங்கர் பிரசாத், “அணுகுண்டு மற்றும் ஹைட்ரஜன் குண்டு தேர்தலுடன் எவ்வாறு தொடர்புடையது. இப்படி பேசுவதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன்னை இழிவுபடுத்திக் கொள்கிறார். ராகுல் காந்தி பொறுப்பற்றவர் என்பதை நாடு புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
