“மோடி ஆட்சியில் ரயிலில் செல்வது தண்டனை”: ராகுல் தாக்கு!

Published On:

| By Selvam

பிரதமர் மோடி ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது தண்டனையாகி விட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 21) குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளா எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 12625) ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் சிலர் கழிப்பறையில் தூங்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில், இந்த வீடியோவை பகிர்ந்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “நரேந்திர மோடி ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது தண்டனையாகி விட்டது. ரயிலில் பயணிக்கும் அனைத்து வகுப்பு பயணிகளும் துன்பப்படுகிறார்கள்.

சாதாரண ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு எலைட் கோச்சுக்களின் எண்ணிக்கையை மட்டுமே மோடி அரசு ஊக்குவிக்கிறது.

ரயில்வே துறையை பலவீனப்படுத்தி, திறமையற்றது என்று நிரூபிக்க பாஜக அரசு விரும்புகிறது. இதனை காரணமாக காட்டி தனது நண்பர்களுக்கு ரயில்வே துறையை விற்க மோடி நினைக்கிறார்.

சாமானியர்களின் ரயில் பயணத்தை காக்க வேண்டும் என்றால், ரயில்வேயை சீரழிப்பதில் மும்முரமாக இருக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘தூர்தர்ஷன்’ லோகோ காவி நிறத்திற்கு மாற்றம்: ஸ்டாலின் காட்டம்!
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: மதுரையில் குவிந்த பக்தர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share