காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தி ஆகிய இருவரின் குணநலன்களும் கலந்த ஒரு துணையுடன் வாழ்க்கையில் செட்டில் ஆக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பாரத் ஜோடோ யாத்திரையின் போது யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அவர் தனது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியை “என் வாழ்க்கையின் அன்பு மற்றும் எனது இரண்டாவது தாய்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்போது அவரிடம், “அப்படிப்பட்ட ஒரு பெண்ணுடன் நீங்கள் வாழ்வில் சேர்வீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இது ஒரு சுவாரசியமான கேள்வி. நான் ஒரு பெண்ணையே விரும்புவேன். அவரது குணநலன்கள் பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் அந்த பெண் என் அம்மா மற்றும் என் பாட்டியின் குண நலன்கள் கலந்து இருந்தால் நல்லது” என பதில் அளித்துள்ளார்.

மேலும், அவர் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் ஓட்டுவதில் தனக்கு உள்ள விருப்பத்தையும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ராகுல் காந்தி “நான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டியிருக்கேன். ஆனால் எலெக்ட்ரிக் பைக் ஓட்டியதில்லை. இந்த சீன நிறுவனத்தைப் பார்த்தீர்களா… எலக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட சைக்கிள்கள் மற்றும் மலை பைக்குகளை வைத்திருக்கின்றன. மிகவும் சுவாரஸ்யமான கான்செப்ட். ஆனால், அவை நல்லவை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும், தனது தாயின் CR-V காரை வைத்திருப்பதாகவும் கூறினார். மேலும், எனக்கு உண்மையில் கார்கள் மீது ஆர்வம் இல்லை. எனக்கு மோட்டார் பைக்குகளில் ஆர்வம் இல்லை, ஆனால் எனக்கு மோட்டார் பைக் ஓட்டுவதில் ஆர்வம் உள்ளது. என்னால் காரை சரிசெய்ய முடியும். காற்றில் , நீரில் மற்றும் நிலத்தில் எனக்கு வேகமாக செல்லும் எண்ணம் பிடிக்கும் என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்