பாரத் ஜூடோ யாத்திரை தொடங்குவதற்காக இன்று (செப்டம்பர் 6) சென்னை விமான நிலையம் வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சால்வை தந்து வரவேற்றனர்.
கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜூடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாளை முதல் (செப்டம்பர் 7) பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறார்.
நாளை மாலை கன்னியாகுமரியில் தொடங்கும் இந்தப் பயணம், காஷ்மீரில் முடிவுற இருக்கிறது.
12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக நடைபெற உள்ள இந்த நடைப்பயணத்தில், 148 நாட்களைக் கழிக்க இருக்கிறார், ராகுல். இதற்காக அவர் 3,570 கி.மீ. தூரம் பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்தப் பாதயாத்திரை குழுவுடன் பாதுகாப்புப் படை ஒன்றும் தகவல் தொடர்புக் குழு ஒன்றும் காஷ்மீர் வரை செல்ல இருக்கிறது.
ராகுலின் இந்தப் பாதயாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கன்னியாகுமரியில் தேசியக்கொடி கொடுத்து தொடங்கிவைக்கிறார்.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் நடைப்பயணத்தை நாளை தொடங்குவதற்காக இன்று டெல்லியிலிருந்து (செப்டம்பர் 6) சென்னை வந்தடைந்தார் ராகுல்.
இன்று இரவு 8.20 மணிக்கு டெல்லியில் இருந்து பயணிகள் விமானத்தில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்த ராகுல் காந்தியை,
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் எம்.பி. ஜெ.எம்.ஆரூண் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் சால்வை தந்து வரவேற்றனர்.
தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட ராகுல்காந்தி காரில் ஏறி பரங்கிமலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.
இன்று இரவு அங்கு தங்கும் ராகுல், நாளை காலை 6 மணிக்கு திருப்பெரும்புதூர் செல்கிறார்.
ஜெ.பிரகாஷ்
