செல்போன்களுக்கு கொடுக்கும் மரியாதை கூட பெற்றோர்களுக்கு கொடுப்பதில்லை என நடிகர் ராகவா லாரன்ஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் கடைசி நேர சட்ட போராட்டத்திற்கிடையே கடந்த 14ம் தேதி வெளியானது.
நடிகர் சரத்குமார், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆக்சன் த்ரில்லராக இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் கோவை கே.ஜி. காம்பளக்ஸில் உள்ள அனுபல்லவி திரையரங்கில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் இருக்கைகளை நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று (ஏப்ரல் 26) திறந்து வைத்தார்.

அதன் பின்னர் இயக்குநருடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர், “மூன்று வருஷத்துக்கு பிறகு ருத்ரன் படம் மூலமாக மக்களை பார்ப்பதில் சந்தோசம். நான் என்னுடைய எல்லா படங்களிலும் பேமிலி சென்டிமெண்ட் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
இந்த உலகத்தில் எவ்வளவு சொத்து இருந்தாலும் அப்பா, அம்மாவை விட்டு நாம் பிரிந்து இருக்க கூடாது. அனைவருமே செல்போனில் அதிக நேரம் செலவழித்து வருகிறோம். இன்றைய இளைஞர்கள் செல்போனுக்கு கொடுக்கும் மரியாதையை கூட பெற்றோர்களுக்கு கொடுப்பதில்லை.” என்றார்.
மேலும் அவர், “காஞ்சனா படத்தை பார்த்தபிறகு திருநங்கைகளை எப்படி மீண்டும் சேர்த்து கொண்டார்களோ, ருத்ரன் படத்தை பார்த்தபிறகு பெற்றோருடன் நேரம் செலவழிக்கவேண்டும் என்று தெரிந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த படத்தின் கருத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொடுத்த எல்லோருக்கும் ரொம்ப நன்றி” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “ஜொர்தாலா பாட்டை ஒரு திருமண விழாவிற்கு சென்றபோதுதான் கேட்டேன். எனக்கு பிடித்திருந்தது. அதன்பிறகு இயக்குநரிடம் பேசி அப்பாடலை படத்தில் வைத்திருக்கிறோம். இதன்மூலம் அந்த பாடலை பாடிய அசல் போன்றோருக்கும் நல்ல அடையாளம் கிடைத்துள்ளது.” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
