மாதவன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து இயக்கும் படம் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் இந்தப் படத்தில் தற்போது சூர்யா, ஷாருக் கான் இணையவுள்ளனர்.
விஞ்ஞானி நம்பி நாராயணன் இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை மாலத்தீவுகள் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாக 1994ஆம் ஆண்டு உளவுத் துறையால் குற்றம் சாட்டப்பட்டு கைதானார். 1996ஆம் ஆண்டு அக்குற்றச்சாட்டை சிபிஐ தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றமும் இவ்வழக்கை 1998ஆம் ஆண்டு இவர் குற்றவாளி இல்லை எனக் கண்டறிந்தது. இது போன்ற வரலாற்றுக் கூறுகளின் அடிப்படையில் மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.
இந்தப் படத்தை ஆனந்த் மகாதேவனோடு மாதவன் இணைந்து இயக்குவதாக இருந்தது. ஆனால் ஆனந்த் மகாதேவன் விலக தற்போது மாதவனே படத்தை இயக்கி நடிக்கிறார். சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் படம் தயாராகிறது. இதில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்ப் பதிப்பில் சிறப்புத் தோற்றத்தில் சூர்யாவும், இந்திப் பதிப்பில் ஷாருக் கானும் நடிக்கவுள்ளனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
சாம் சி.எஸ் இசையமைக்க, ஸ்ரிஷா ராய் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரைகலர் பிலிம்ஸ், விஜய் மூலன் டாக்கீஸ், ஸப்ரான் கணேஷா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.
