இலங்கைக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவரும் இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று தொடரைக் கைப்பற்றியது.
நேற்று (ஆகஸ்டு 12) தொடங்கிய மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் ராகுல் சிறந்த தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 188 ரன்களைச் சேர்த்தது இந்த ஜோடி. அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன்களை சேர்த்தது. விருத்திமான் சாஹா, ஹர்திக் பாண்டியா இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சாஹா 16 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து நிதானமாக விளையாடிய உமேஷ் யாதவ் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்து வந்ததால், முதலில் நிதானமாக விளையாடிய ஹார்திக் பாண்டியா பின்னர் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். அவர் ஒரே ஓவரின் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடித்து 26 ரன்கக்ச் சேர்த்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஹார்திக் பாண்டியா சதம் அடித்தார். இவரது சதம் இந்திய அணியின் ஸ்கோர் உயர மிக உதவியாக இருந்தது. உணவு இடைவேளை வரை இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்களை சேர்த்திருந்தது. ஹார்திக் பாண்டியா 108 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
