பொய்வழக்கை வாபஸ் பெறவேண்டும்!

Published On:

| By Balaji

கதிராமங்கலம் விவசாயிகள் மீதான பொய்வழக்கை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக கருத்து தெரிவித்துள்ளனர்

கதிராமங்கலம் விவசாயிகள் போராட்டம் குறித்து பூவுலகின் நண்பர்கள் சங்கம் சார்பில் இன்று ஜூலை 3ஆம் தேதி சென்னையில் ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), வன்னியரசு (விடுதலைச் சிறுத்தை), மல்லை சத்யா (மதிமுக), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), உதயகுமார் (பச்சை தமிழகம்) ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,

ADVERTISEMENT

கதிராமங்கலத்தில் கடந்த சில நாட்களாகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நசுக்கி போராட்டத்தை ஒடுக்கும் வகையில், போலீசார் எடுத்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதை உடனடியாக வாபஸ் பெற்று கதிராமங்கலம் பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

கதிராமங்கலத்தில் நடைபெற்றுவரும் ஓ.என்.ஜி.சி. பணிகள் செய்வதை நிறுத்திவிட்டு வெளியேற வேண்டும். தமிழகத்தைப் பாலைவனமாக்கும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இன்று சட்டசபையில் முதலமைச்சர் பேசும்போது, பொதுமக்களே வன்முறையைத் தூண்டியதால்தான் போலீசார் நடவடிக்கை எடுத்ததாகப் பொய்யான தகவல்களைக் கூறியுள்ளார். மேலும், போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மீதும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி, போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு மிரட்டல் விடுத்து, பல்வேறு நெருக்கடிகளையும் கொடுத்து வரும் அரசு விவசாயிகள் மீதான பொய் வழக்கை வாபஸ் பெறவேண்டும். இல்லையென்றால், அடுத்த கட்ட நடவடிக்கையாக வலுவான போராட்டம் நடைபெறும் விதமாக, தலைமைச் செயலகம், முதல்வர் வீடு மற்றும் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் கூறினர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share