உக்ரைன் போர் தொடங்கி ஏறக்குறைய 4 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால் போர் ஓய்வதற்கான அறிகுறி தெரிவதற்குப் பதிலாக, அது ஐரோப்பா முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஐரோப்பிய நாடுகளுக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“பேச்சுவார்த்தைக்கு ஆள் இருக்காது”: மாஸ்கோவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய புடின், “நாங்கள் ஐரோப்பாவுடன் போரிட விரும்பவில்லை. ஆனால், ஐரோப்பா திடீரென எங்களுடன் போரைத் தொடங்க நினைத்தால், ரஷ்யா மிகக் கடுமையான பதிலடி கொடுக்கும். அந்தத் தோல்வி மிக மோசமானதாக இருக்கும். அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தக் கூட ஐரோப்பாவில் யாரும் உயிருடன் மிஞ்ச மாட்டார்கள்” என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
உக்ரைன் போர் ஒரு ‘சாம்பிள்’ தான்: “உக்ரைனில் நாங்கள் நடத்துவது ஒரு முழுமையான போர் அல்ல; அது ஒரு ‘அறுவை சிகிச்சை’ (Surgical) போன்ற நடவடிக்கை தான். ஆனால் ஐரோப்பாவுடனான மோதல் வந்தால், அது இதைப்போல இருக்காது” என்று புடின் கூறியுள்ளது, மேற்கத்திய நாடுகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முயன்று வருகிறார். ஆனால், ஐரோப்பிய நாடுகள் அதற்கு முட்டுக்கட்டை போடுவதாகப் புடின் குற்றம் சாட்டியுள்ளார். “ரஷ்யாவால் ஏற்க முடியாத நிபந்தனைகளை விதித்து, ‘ரஷ்யாவுக்கு அமைதி விருப்பமில்லை’ என்று பழிபோட ஐரோப்பா நினைக்கிறது. உண்மையில் அவர்கள் தான் போரின் பக்கம் (Side of War) நிற்கிறார்கள்” என்று அவர் சாடியுள்ளார்.
அடுத்தது என்ன? (More Conflict ahead): இன்னொரு பக்கம், ரஷ்யாவின் நடவடிக்கைகளை உற்று நோக்கும் ராணுவ நிபுணர்கள், போர் முடிவதற்கான அறிகுறியே தெரியவில்லை என்கிறார்கள். ஸ்கை நியூஸ் (Sky News) ஆய்வின்படி:
- அமைதிப் பேச்சுவார்த்தை நடப்பதாகச் சொல்லிக் கொண்டே, உக்ரைனின் அதிக நிலங்களைக் கைப்பற்றவே புடின் முயல்கிறார்.
- ரஷ்யா தனது ராணுவ தளவாட உற்பத்தியைக் குறைக்கவில்லை. மாறாக, அதிகப்படுத்தி வருகிறது. இது அவர்கள் நீண்ட காலப் போருக்குத் தயாராவதையே காட்டுகிறது.
ஐரோப்பா தயாராகிறதா? புடினின் இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்க ஐரோப்பிய நாடுகளும் தயாராகி வருகின்றன. பிரான்ஸ் நாடு, “ரஷ்யாவுடனான போரில் தங்கள் பிள்ளைகளை இழக்கக் பெற்றோர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளது. ஜெர்மனியும் இளைஞர்களுக்குக் கட்டாய ராணுவப் பயிற்சி அளிப்பது குறித்து யோசித்து வருகிறது.
மொத்தத்தில், உலகம் மீண்டும் ஒரு உலகப்போரின் விளிம்பில் நிற்கிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது.
