“உங்கள் தந்தையாக சொல்கிறேன்”: புதுமைப் பெண் திட்டத்தில் முதல்வர் பேச்சு!

Published On:

| By Monisha

puthumai penn scheme

புதுமைப் பெண் திட்டம் 2-ம் கட்டத்தைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.

அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்காக மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் கடந்த ஆண்டு முதற்கட்டமாகத் துவக்கி வைக்கப்பட்டது. இதனால் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை இன்று (பிப்ரவரி 8) பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

pudhumai penn scheme mk stlain inagurate

பின்னர் விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார்.

அப்போது அவர், ”உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஒரு செய்தியைச் சொன்னார். அது இந்த புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்விச் சேர்க்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது. திமுக முதன்முதலில் ஆட்சிக்கு வந்த காலத்தில் அரசு நிதியுதவியுடன் தொடங்கிய கல்லூரி இது. இன்றைக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுடன் இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது.

முதலமைச்சராக இருந்த கலைஞர் தன்னுடைய பேனாவால் போட்ட ஒரு கையெழுத்து இன்று லட்சக்கணக்கான மாணவ மாணவிகளை உருவாக்கியிருக்கிறது.

ஒரு நாடு செழித்து நிறைவுடன் திகழ வேண்டும் என்று சொன்னால் நாட்டில் உள்ள மக்கள் கல்வி அறிவுடன் இருக்க வேண்டும். கல்வி என்பது பெண்களுக்கு மிக மிக முக்கியம். அத்தகைய கல்வி செல்வம் அனைவரும் பெற வேண்டும் என்று உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திராவிட இயக்கம்.

மதம், இனம், சாதி, வர்த்தகம், பாலின ரீதியாக வேறுபாடுகள் கற்பிக்கப்பட்டிருந்த இந்த நிலத்தில் அனைவரும் சமம், அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது தான் திராவிட இயக்கம்.

pudhumai penn scheme mk stlain inagurate

அடக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் நாம் எதிர்கிறோம், சமத்துவம் பேசுகிறோம். இந்த விழிப்புணர்வு அதிகமாகத் தேவை என்ற காரணத்தால் தான் கல்வியை நாம் கற்றாக வேண்டும் என்று போராடி இந்த உரிமையைப் பெற்றிருக்கிறோம்.

கல்வியை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என்ற சேவையை நீதிக்கட்சி காலத்தில் இருந்து செய்து வருகிறோம். அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் தான் சம நீதி கருத்தியல் உருவாக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கல்வி எல்லோரிடமும் சென்று அடைய வேண்டும் என்ற காரணத்தால் திராவிட இயக்கம் சார்பில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டது.

அதிலும் பெண் சமூகத்தைக் கூடுதலாகக் கவனிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான திட்டங்கள் உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. உதாரணமாக 1921 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை, 1989-ல் சொத்துரிமை, அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய திட்டங்கள் அடங்கும்.

ஆனால் 30 சதவீதம் என்பது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. மகளிர் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது மகளிர் சுய உதவிக் குழு திட்டம்.

இந்த புதுமைப் பெண் திட்டம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பள்ளி கல்வியைப் பயின்ற அரசுப் பள்ளி மாணவிகள் காலேஜ் போகாமல் நின்று விடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த திட்டம். இந்த திட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இதற்காகக் கடந்த 5 மாதங்களில் 69.44 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

குடும்பத்தின் பொருளாதார காரணங்களால் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தவிருந்த 12 ஆயிரம் மாணவிகள் இந்த தொகை கிடைத்த காரணங்களால் படிப்பைத் தொடர்கிறார்கள் என்பது தான் இந்த திட்டத்தின் மாபெரும் வெற்றி. இதன்மூலமாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும். படித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். அறிவுத் திறன் கூடும். திறமைசாலிகள் அதிகமாக உருவாகுவார்கள்.

பாலின சமத்துவம் ஏற்படும். குழந்தைகள் திருமணம் குறையும். பெண்கள் அதிகாரம் பெற்று சொந்தக் காலில் பெண்கள் நிற்கிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வியைத் தொடர முடியாமல் கைவிட்ட 10,146 மாணவிகள் இந்த திட்டத்தின் வாயிலாக தங்களது உயர்கல்வியைப் பயிலத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த திட்டத்தின் வாயிலாகப் பயன்பெற்ற 1,56,016 மாணவிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் 48,660 பேர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 50,550 பேர். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 44,880 பேர். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 1,900 பேர் இதனால் பயனடைந்துள்ளார்கள்.

நன்றாக படியுங்கள், உயர்கல்வியைப் படியுங்கள். ஏதாவது ஒரு பாடத்தில் ஆராய்ச்சி செய்யுங்கள். தகுதியான வேலைகளில் சேருங்கள். பெண்ணுக்குத் திருமண வாழ்க்கை என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல பொருளாதார சுதந்திரமும் முக்கியம். தகுதியுள்ள வேலைவாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிக்கும் காலத்தில் திறமையாக செயல்படக் கூடிய எண்ணத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் உங்களுக்கான தனித்த அடையாளத்துடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

படிக்கும் காலத்தில் கவன சிதறல்கள் வேண்டாம். கல்லூரி காலத்தைப் படிப்பிற்கும் உயர்விற்கும் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை முதலமைச்சராக இல்லாமல் உங்கள் சகோதரனாக, தந்தையாகக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

மோனிஷா

விமர்சனம்: சந்தீப்பை ‘ஸ்டார்’ ஆக்குமா மைக்கேல்

குக்கர் கிடைக்காததற்கு, பாஜகவின் ப்ரஷர் காரணமா? தினகரன் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share