விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த 21 வயதான விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் இன்று (பிப்ரவரி 23) தெரிவித்துள்ளார்.
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 13 முதல் டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் டெல்லியில் நுழைவதை தடுக்க சிங்கு, திக்ரி, காசிப்பூர் பகுதிகளில் தடுப்புகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி பஞ்சாப் – டெல்லி எல்லைப்பகுதியான கனூரி பகுதியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 வயதான விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தார்.
இதனையடுத்து விவசாயிகள் போராட்டம் இரண்டு நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று கருப்பு தினமாக கடைபிடிக்க விவசாய அமைப்புகள் முடிவெடுத்துள்ளன.
மேலும், இளைஞரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் ஹரிந்தர் பால் சிங் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் கூறும்போது,
“சுப்கரன் சிங் மரணத்திற்கு காரணமான போலீசார் யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பரத்திற்காக சுப்கரன் போராட்டத்தில் ஈடுபடவில்லை, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கேட்பதற்காகவே போராட்டத்தில் ஈடுபட்டார்.
உயிரிழந்த சுப்கரன் குடும்பத்திற்கு பஞ்சாப் அரசு ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது தங்கைக்கு அரசு வேலையும் வழங்கும்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உடன் பஞ்சாப் அரசு துணை நிற்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதால், பஞ்சாப்பில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.
இந்த மிரட்டல்களுக்கு நான் பயப்படவில்லை, இனி எந்த சுப்கரனையும் இறக்க விடமாட்டேன். பதவி என்பது எனக்கு முக்கியமில்லை. அதனால் மிரட்டுவதை முதலில் நிறுத்துங்கள்.
எங்களை மிரட்டுவதற்கு முன்பாக மணிப்பூரை நினைத்து பாருங்கள். மத்திய அரசு தங்களின் ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, விவசாயிகளின் கோரிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…