ரெட் அலர்ட் எச்சரிக்கையை அடுத்து புதுச்சேரி, காரைக்காலில் நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் சூழலில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளைக்கு வானிலை எப்படி?
அதே போன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் நாளை அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை எதிரொலியாக மழையின் தீவிரத்தை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம்.
அந்த வகையில் கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழக மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிக்கான விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
