புதுச்சேரி சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் “நேயம் மக்கள் கழகம்” இணைந்துள்ளது; இந்த கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் இன்னும் சற்று நேரத்தில் வேட்பு மனுத் தாக்கல் முடிவடையும் நிலையில் கூட்டணி குறித்த அறிவிப்பை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, “நேயம் மக்கள் கழகம்” நிறுவனத் தலைவர் திரு. G.நேரு (எ) குப்புசாமி MLA அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் “உருளையன்பேட்டை” மற்றும் “தட்டாஞ்சாவடி” ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில், புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடுவதாக கூறியிருந்தார். மேலும் உருளையன்பேட்டை தொகுதியில் மரிய பிரான்சிஸ், தட்டாஞ்சாவடி தொகுதியில் எம். பன்னீர்செல்வம் ஆகியோர் வேட்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
