தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை விதிக்கக் கோரிய மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017-18 ஆம் ஆண்டுக்குப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஒரு நாளுக்கு 48 லட்சம் முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் புள்ளிகளை கோரி தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதில் மாநிலத்தில் உள்ள சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வெளி மாநில கோழி பண்ணைகள் பங்குபெறுவதை தடை செய்தும், தமிழகத்தை 6 மண்டலங்களாகப் பிரித்து மண்டல வாரியாக ஒப்பந்த புள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தனியார் கோழி பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி டெண்டருக்கு தடை விதித்து வெளி மாநில கோழி பண்ணைகளையும் அனுமதிக்க கோரி கரூரை சேர்ந்த வாசுகி கோழி பண்ணை உள்ளிட்ட 4 பண்ணைகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன் முன் இன்று(செப்டம்பர் 4) விசாரணைக்கு வந்தபோது, “கொள்முதல் விவகாரத்தில் அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள உரிமை உள்ளது. குறிப்பிட்ட நபருக்கு சாதகமாக செயல்பட இந்த அரசாணை பிறப்பிக்கப்படவில்லை, ஆரோக்கியமான போட்டிக்காகவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இடைத்தரகர்களை தவிர்ப்பதற்காகவே இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி மகாதேவன் விசாரணையை நாளை (செப்டம்பர் 5) ஒத்தி வைத்துள்ளார்.�,