உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநிலத் தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையத்தின் செயலாளர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
2016ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தலில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றுகூறி, திமுக தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தலை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்துத் தமிழக அரசின் சார்பிலும் தேர்தல் ஆணையத்தின் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணையில், தேர்தலை நடத்தக் கால அவகாசம் தேவை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், தேர்தலை நடத்தும் தேதியை தெரிவிக்குமாறு உத்தரவிட்டது. ஆனாலும் தொடர்ந்து பலமுறை உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் அவகாசம் பெற்றுள்ளது.
இறுதியாக, கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை இனியும் தாமதப்படுத்தக் கூடாது. நவம்பர் 17ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும். இதற்கான அறிவிக்கையை செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதனால் திமுக சார்பில் ஆர்.எஸ்..பாரதி, தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை ஏற்ற நீதிமன்றம், மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான், செயலாளர் டி.ஆர்.ராஜா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மாலிக் பெரோஸ் கான், டி.ஆர்.ராஜா ஆகியோர் இன்று (நவம்பர் 7) ஆஜராகினர். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வரும் 10ஆம் தேதிக்கு வழக்கைத் தள்ளிவைத்தனர். அன்றைய தினம் தேர்தல் அதிகாரிகள் மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.�,”