கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் பண ஆதாயம் பெற்றதாக முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மார்ச் 23ஆம் தேதி கார்த்திக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், வெளிநாடு செல்வதற்கு அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆஸ்திரியா, இத்தாலி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கான பயணத்தை கார்த்தி நவம்பர் 3ஆம் தேதி தொடங்கவுள்ளதால், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் வழியுறுத்தினார்.
இந்த மனு இன்று (நவம்பர் 1) விசாரணைக்கு வந்தபோது, இதனை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்துவிட்டார். வழக்கை நாளைக்கு (நவம்பர் 2) விசாரணைக்கு எடுத்துகொள்வதாக அவர் தெரிவித்தார்.
**சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு**
இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித் தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் இருவரையும் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தடையை ரத்து செய்ய கோரி, அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அக்டோபர் 8ஆம் தேதி விசாரித்த சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரைக் கைது செய்வதற்கான தடையை நவம்பர் 1ஆம் தேதி வரை நீட்டித்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அன்றைய தினமே நடைபெறும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ப.சிதம்பரத்தின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான அமலாக்கத்துறை, ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் எந்தவித ஒத்துழைப்பையும் தர மறுப்பதாக அமலாக்கத்துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்டதோடு, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது.
இன்று (நவம்பர் 1) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்த பாட்டியாலா நீதிமன்றம் நவம்பர் 26ஆம் தேதிவரை சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்துள்ளது. வழக்கின் விசாரணையும் அன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.�,