ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கத்தான் விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்று விமர்சித்துள்ளார் ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங். இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு வலுத்து வருகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக விலை வீழ்ச்சி, பயிர்க் காப்பீடு, மானியங்கள், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களையும், கோரிக்கைகளையும் வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு முன்பும் வேளாண் பொருட்களின் விலை வீழ்ச்சியைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டங்களில் பால், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைச் சாலைகளில் கொட்டி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து பத்து நாட்களுக்குப் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் சில விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்தப் போராட்டங்கள் குறித்து பாட்னாவில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ராதா மோகன் சிங் அளித்த பேட்டியில், விவசாயிகள் போராட்டம் நடத்துவது எல்லாம் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கத்தான். இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அமைப்புகளில் சில ஆயிரம் பேர்தான் இருக்கின்றனர்” என்று விமர்சித்துள்ளார். இந்த விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் ஜஹா, “ராதா மோகன் சிங் கூறியுள்ள இந்த இரக்கமற்ற கருத்துக்கள் பிஜேபி தலைவர்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளார்கள் என்பதையே உணர்த்துகிறது. ராதா மோகன் சிங்கின் வேளாண் துறை அமைச்சரவையில் விவசாயிகள் கடுமையான அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” என்று கூறியுள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தானி அவம் மோர்ச்சா அமைப்பின் நிறுவனர் ஜித்தன் ராம் மஜ்ஹி கூறுகையில், “நிலப்பிரபுத்துவ மனநிலை கொண்ட, விவசாயிகளுக்கு எதிரான ராதா மோகன் சிங்கை வேளாண்துறை அமைச்சர் பதவியிலிருந்து மோடி நீக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.�,”