Yகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்!

Published On:

| By Balaji

செம்புப் பாத்திரங்களில் உணவுகளை வைத்துச் சாப்பிடலாமா?

நம்மில் பெரும்பாலானோர் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில் செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.

பொதுவாக மற்ற பாத்திரங்களை விடவும் செம்புப் பாத்திரங்கள் பயன்படுத்துவதே சிறந்தது எனப் பலராலும் சொல்லப்படும் நிலையில், செம்புப் பாத்திரங்களில் உணவுகளை வைத்துச் சாப்பிடலாமா என்கிற கேள்வியும் பலரிடம் எழுகிறது.

செம்பு தாது, நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. செம்புப் பாத்திரம் அல்லது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செம்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல கலக்கும். பின்னர் அந்நீரைக் குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும். குறிப்பாக இரவே செம்புப் பாத்திரத்தில் அல்லது ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதைக் காலையில் குடிக்கும்போது உடலுக்கு அதிக ஆற்றல், விரைவாகக் கிடைத்து, அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.

‘செம்புப் பாத்திரத்தை விளக்கி செடிக்கு அடியிலே ஊற்று’ என்பது பழமொழி. இதன் பொருள் செம்புப் பாத்திரம் கழுவிய நீரை செடிக்கு ஊற்றும்போது, அந்நீரை உறிஞ்சி வளரும் செடியின் வாயிலாகக் கிடைக்கும் காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவையாக இருக்கும். அக்காய்கறிகளை நாம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு மிகுந்த பயன்கிடைக்கும் என்பதுதான் பொருள். செம்புப் பாத்திரத்தின் அருமை தெரிந்த நம் முன்னோர்கள் சொல்லிவைத்துச் சென்ற இப்பழமொழி…விஞ்ஞானக் காலத்திலும் நிலைத்து நிற்கும் உண்மை கூற்று.

செம்பு எனப்படும் காப்பர் சத்துதான் ரத்த விருத்திக்குத் தேவையான அடிப்படை தாது உப்பு. செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணிநேரங்கள் கழித்துக் குடிக்கும்போது, தண்ணீருடன் சேர்த்து செம்பு தாதுவும் நம் உடலுக்குள் சென்று, உடல் உறுப்புகளைச் சீராக வேலை செய்ய வைக்கிறது. மேலும் செம்பு தாது, நல்ல ரத்த அணுக்களைத் தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால், செம்பு கலந்த நீரைக் குடிக்கும்போது ரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும். இதனால் ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட ரத்தம் சார்ந்த உடல்நலப் பிரச்னைகளின் வரவும் தடைபடும்.

செம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் ரத்தச்சோகை பிரச்சினையின் வரவைக் கட்டுப்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிகள் செம்புப் பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும்.

நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்களை விடவும் செம்புப் பாத்திரங்கள்தான் சிறந்தவை. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பியும், உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தி அதிகமாகும். குறிப்பாக முந்தையக் காலங்களில் பெண்களைத் திருமணம் செய்து அனுப்பும்போது, செம்புப் பாத்திரங்களைச் சீராகக் கொடுத்து அனுப்புவார்கள். புதுமணத்தம்பதிகள் செம்பு பாத்திரத்தைப் பயன்படுத்தி விரைவில் குழந்தைப் பேறு, நோய் நொடியில்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆனால், செம்புப் பாத்திரங்களில் உணவுகளை வைத்துச் சாப்பிடுவது நல்லதல்ல. விரைவிலேயே உணவு கெட்டுப் போய்விடும். தண்ணீரைச் சுத்திகரிக்கக் கூடிய ஆற்றல் செம்புக்கு இருக்கிறது. அதனால் தண்ணீரை வைத்துக் குடிக்கலாம்.

செம்புப் பாத்திரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாத்திரத்தில் ஒருவிதக் களிம்பு உருவாகிவிடும். களிம்பு சேர்ந்த பாத்திரத்தில் தண்ணீரை வைத்துக் குடிக்கும்போது அது நச்சாக மாற வாய்ப்புண்டு. விபூதி, சாம்பல், உப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி நன்றாகக் கழுவியபிறகே செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.

[நேற்றைய ரெசிப்பி: மரவள்ளிக்கிழங்கு பெப்பர் ஃப்ரை](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/22/5)

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share