அடுத்த இரு அல்லது மூன்று நாட்களில் வெங்காயம் விலை குறையும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது, இல்லையென்றால் அரசே நேரடியாக வெங்காயத்தைக் கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் என்றும் கூறியுள்ளது,
வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களான, மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் மழையின் காரணமாக உற்பத்தி குறைந்தது. இதனால் தமிழகம் உட்பட நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்தது. டெல்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது, சென்னையில் ரூ.60க்கும் அதிகமாக விற்பனையாகிறது. இதனால் ஹோட்டல் உரிமையாளர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலை நீடித்தால் விரைவில் வெங்காயம் விலை ரூ.100 தொடும் என்ற அச்சம் எழுந்தது. எனவே வெங்காயத்தின் விலையை குறைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில் இன்று (செப்டம்பர் 23) தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர், துறைசார்ந்த அதிகாரிகளுடன் வெங்காய விலை உயர்வு குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து, அடுத்த இரு அல்லது மூன்று தினங்களில் வெங்காய விலை குறையும் என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.45 முதல் ரூ.46 வரை பண்ணை பசுமை கடைகளில் விற்கப்படுவதாகவும், தனியார் கடைகளில் ரூ.55 முதல் ரூ.60 அளவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதிகமான விலைக்கு விற்கப்படுவதில்லை எனவும், செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிரம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்வதால், வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால் அதன் விலை அதிகரித்துள்ளது.
தற்போது நாசிக் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 2 இடங்களிலிருந்து வெங்காயம் கோயம்பேட்டிற்கு வரவுள்ளது, இதனால் அடுத்த மூன்று நாட்களில் வெங்காயத்தின் விலை குறையும். வெங்காய விலை உயர்வு தொடர்பான நகர்வுகளை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. எங்கும் பதுக்கல் இல்லாமல் மக்களுக்குச் சிரமமின்றி வெங்காயம் விநியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெங்காயத்தின் விலை உயர்ந்தால் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசே வெங்காயத்தைக் கொள்முதல் செய்து நுகர்வோர் பாதுகாப்பு கடை மூலமாக விற்பனை செய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
�,”