~ஐந்து மாநிலங்களில் ரூ.331 கோடி பணம், நகை பறிமுதல்!

Published On:

| By Balaji

தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம்,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அந்தந்த மாநிலங்களில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தலா மூன்று பறக்கும் படை, கண்காணிப்புக் குழுக்களைத் தேர்தல் ஆணையம் அமைத்தது. தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் 295 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம், மதுபானம் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த செலவு ‘லஞ்சம்’ என்ற வரையறையின் கீழ் வருவதால், இது ஐபிசியின் 171பி மற்றும் ஆர்.பி. சட்டம், 1951இன் கீழ் குற்றமாகும். இது சட்டவிரோதமானது. இதைத் தடுக்க வேண்டும் என ஏற்கனவே இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இதுவரை ஐந்து மாநிலங்களில் ரூ.331 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் ரூ.112.59 மதிப்பிலான பொருட்கள், பணமும், தமிழகத்தில் ரூ.127.64 கோடி மதிப்பிலான பணம், நகையும், கேரளாவில் ரூ.21.77 கோடி மதிப்பிலான பணம், நகையும், அசாமில் ரூ.63.75 மதிப்பிலான பொருட்கள், பணமும், புதுச்சேரியில் ரூ.5.72 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது ரூ.225.77 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

**தமிழகம்**

கொரோனா அதிகரித்து வருவதால், தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்த ஆலோசனையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவில்லை. பிகாரில் தேர்தல் நடந்தபோது, நாள்தோறும் 12,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால், தமிழகத்தில் அந்தளவுக்கு பாதிப்பு இல்லை. சுகாதாரத் துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சூழலுக்கேற்ப தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேர்தல் பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்டக் காவல்துறை அதிகாரிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

**வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share