நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு மானிய விலையில் டீசல் வழங்கியதில் நடந்த முறைகேடு குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு மத்திய அரசு மற்றும் என்எல்சி நிறுவனம் பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கப் பணிகளுக்காக இரண்டு தனியார் நிறுவனங்களுடன் என்எல்சி ஒப்பந்தம் செய்தது. அப்போது, சுரங்கப் பணிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்கியதில் என்எல்சி நிறுவனத்துக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த மத்திய ஊழல் தடுப்பு ஆணையம், மானிய விலையில் டீசல் வழங்கியதில் எந்த முறைகேடும் இல்லை என்று தெரிவித்தது.
இதனை எதிர்த்து என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
நேற்று (ஜூலை 12) இந்த மனு குறித்து விசாரணை செய்தார் நீதிபதி டி.ராஜா. இதன் முடிவில், இந்த மனுவுக்கு மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென்று மத்திய அரசு, சிபிஐ, என்எல்சி நிறுவனம் மற்றும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.�,