அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா சென்னை ராயப்பேட்டை மணி கூண்டு அருகே இன்று (மார்ச் 12) நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு புதிய கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்து கொடியேற்றினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற தோல்வியை அனுபவமாகக் கருதி வரும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் நல்ல கூட்டணியை அமைப்போம். இந்த கூட்டணி மிக வலுவாக அமைந்து மாபெரும் வெற்றி பெறும், கூட்டணி இறுதி செய்யப்பட்ட பிறகு உங்களுக்கு தெரிவிப்போம். தேர்தல் ஆணையம் அமமுக வுக்கு சின்னத்தை உரிய நேரத்தில் வழங்கும்” என்றார்.
சசிகலா விடுதலை பற்றிய கேள்விக்கு, “அவரது தண்டனை 2021 ஜனவரியில் முடியும், அதற்குள்ளாகவே அவரை வெளியே கொண்டுவரும் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம். எனவே அதற்கு முன்னரே கூட அவர் வெளியே வரலாம். அவர் வெளியில் வந்த பிறகு எங்களுடன் தான் இருப்பார். 2021 பிப்ரவரியில் உறுதியாக அவர் வெளியே இருப்பார். உங்கள் கேள்விகளுக்கு அவரே பின் பதில் சொல்வார்.நீங்கள் ஆசைப்பட்டால் அவரிடமே ஸ்டேட்மெண்ட் வழக்கறிஞர் மூலம் வாங்கித் தருகிறேன்” என்று கூறினார் தினகரன்.
-வேந்தன்�,