ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பெண்களுக்குத்தான் அதிகப்படியான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கின்றனர். தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளை அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் நன்னடத்தை மேம்பாடு மற்றும் குற்றத்தடுப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சாதிக் அகிப், “பெண்கள் அதிக தூரம் குறிப்பாக 75 கிலோமீட்டருக்கு அதிகமாகப் பயணம் செய்வதாக இருந்தால் நெருங்கிய ஆண் உறவினர் ஒருவரின் துணையோடுதான் செல்ல வேண்டும்.
அதோடு வாகன உரிமையாளர்கள் பெண்களை முஸ்லிம்களின் ஆடையான பர்தா அணிந்து வந்தால் மட்டுமே வாகனங்களில் ஏற்ற வேண்டும். வாகனங்களில் இசை ஒலிக்கக் கூடாது. பெண் பத்திரிகையாளர்கள் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் பர்தா அணிந்துகொண்டுதான் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே, பெண்கள் டி.வி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று தாலிபன்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டிருப்பது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெரும்பாலான பெண்கள் பர்தா அணிந்தபடியே வெளியில் வருகின்றனர். அவர்களின் உரிமைகள் தற்போது அதிக அளவில் பறிக்கப்பட்டிருக்கிறது. 1990ஆம் ஆண்டில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த போது பெண்களுக்கு இருந்த உரிமைகள்கூட இப்போது இல்லாமல் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
**-ராஜ்**
.�,”