குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு பெண்கள் தேர்வு செய்யப்படுவதற்காக தமிழக அரசு நிறுவனத்துடன், அயல்நாட்டு நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
குவைத் நாட்டின் ‘குவைத் கேட் பவுண்டேஷன்’ என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் குவைத் நாட்டில் வீட்டு வேலை பணியாளராகப் பணிபுரிவதற்கு 30 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண் பணியாளர்கள் 500 பேரை பணியமர்த்தம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, வீட்டுப் பெண் பணியாளர்களாக அரபு நாடுகளில் பணிபுரிந்து அனுபவம் உள்ளவர்களுக்கு மாத ஊதியம் ரூ.32,000 மற்றும் அனுபவம் இல்லாதவர்களுக்கு மாத ஊதியம் ரூ.29,500 வழங்கப்படும். மேலும் மருத்துவப் பரிசோதனை கட்டணம், விசா, விமானப் பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி மற்றும் இதர சலுகைகள் குவைத் நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மாதச் சம்பளம் தவறாமல் வழங்க வேண்டும்.
இந்த ஒப்பந்தம் இரண்டு வருடம் வரை நீடிக்கும். ரத்து செய்யாதபட்சத்தில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். குவைத் நாட்டின் கலாசார பண்புகள் குறித்த கையேடு பணியாளர்களுக்கு அவர்களின் தாய்மொழியில் வழங்க வேண்டும். பணிபுரியும் இடத்தில் பணியாளருக்கு ஏதுவான சூழ்நிலை உருவாக்கி கொடுக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் அறிய, சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தையோ அல்லது சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தையோ அணுகலாம்.
மேலும் தங்களது சுயவிவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் **omchousemaidkuwait21@gmail.com**என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட வேலைக்கான விவரங்களை **[www.omcmanpower.com](https://www.omcmanpower.com/)** என்ற இணையதளம் மூலமாகவும், 044-22505886/22500417 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது 17.11.2023 வரை நடைமுறையில் இருக்கும். விருப்பமுள்ள மனுதாரர்கள் இக்காலகட்டத்துக்குள் பதிவு செய்துகொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் நபர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.�,