கோடையையொட்டி விடுமுறை நாட்களில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் ஆழியாறு அணையில் மீண்டும் படகு சவாரி தொடங்குமா என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பூங்கா, அணை உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியாறு பூங்காவின் அழகை ரசிக்கவும், கடல்போல் விரிந்து பரந்து கிடக்கும் அணை பார்க்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். குறிப்பாக, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதையொட்டி இந்த அணையில் படகு சவாரி நடந்து வந்தது.
இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அந்த நேரத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை இந்த அணையில் படகு சவாரி தொடங்கப்படவில்லை. இதனால் அணைப்பகுதியில் காலியாக கிடக்கும் படகை சுற்றுலா பயணிகள் ஏக்கத்துடன் பார்த்து செல்லும் நிலை நீடித்து வருகிறது. அத்துடன் இனியாவது இங்கு படகு சவாரி தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் சுற்றுலா பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அங்குள்ளவர்கள், “ஆழியாறு அணையில் படகு சவாரிக்கு 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ.30-ம், 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.40-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் கோட்டூர் பேரூராட்சி வருமானம் கிடைத்தது. கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட படகு சவாரி இன்னும் தொடங்கப்படவில்லை.
தற்போது அணைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது.
குறிப்பாக அணையில் படகு சவாரி செய்வதற்காகவே சில சுற்றுலா பயணிகள் இங்கு வருவது உண்டு. எனவே அவர்களும் ஏமாந்து செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் இந்த அணையில் படகு சவாரியைத் தொடங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
**ராஜ்**
.