முதுமலை வனப்பகுதியில் வறட்சி காரணமாக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
முதுமலை வனப்பகுதியில் காட்டு யானை, காட்டெருமை, மான், புலி, சிறுத்தைப்புலி உட்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் காரணமாக இந்த வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மரங்களில் இலைகள் உதிர்ந்து வருவதுடன், புற்களும் கருகிவிட்டன. இதன் காரணமாக பசுந்தீவனங்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தீவனங்களை சாப்பிடும் காட்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு போதிய அளவுக்கு தீவனங்கள் கிடைப்பது இல்லை.
குறிப்பாக காட்டு யானை ஒரு நாளுக்கு 250 கிலோ பசுந்தீவனங்களைச் சாப்பிடும் பழக்கம் கொண்டது. ஆனால், இங்கு ஏற்பட்டு உள்ள வறட்சி காரணமாக பசுந்தீவனங்கள் கிடைக்காததால் காட்டு யானைகள் தங்கள் குட்டிகளுடன் கூட்டம்கூட்டமாக தீவனங்கள் கிடைக்கும் இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றன.
குறிப்பாக முதுமலை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் காட்டு யானைகள் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் இங்குள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களையும் நாசம் செய்து வருகின்றன. அதுபோன்று பிற வனவிலங்குகளும் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன.
இதன் காரணமாக வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் மனித – வனவிலங்கு மோதல்கள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளைத் துரத்து ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அத்துடன், “வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமப்புற மக்கள் காட்டு யானைகளை ஈர்க்கக்கூடிய வாழை, பாக்கு, பலா உள்ளிட்ட விவசாய பயிர்களைப் பயிரிட வேண்டாம். தற்போது வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் ஊருக்குள் வர வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
**-ராஜ்**
�,