மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான நாடு முழுவதும் அமலில் இருந்து வரும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் முடிகிறது. ஊரடங்கை தொடர்ந்து நீட்டிப்பதா அல்லது கூடுதல் தளர்வுகளை அளிப்பதா என்பது குறித்து மாநில அரசுகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனைக்குப் பிறகு தமிழகத்தில் ஊரடங்கின் நிலை என்னவெனத் தெரியவரும்.
இந்த நிலையில் அனைத்து மாநிலங்களையும் முந்திக்கொண்டு ஆகஸ்ட் 30 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது மேற்குவங்க அரசு. இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. என்றாலும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும்தான் ஊரடங்கு அமலில் இருக்கும். 2, 5,8,9, 16, 17, 23, 24, 31 ஆகிய நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது” என்று அறிவித்துள்ளார்.
மேலும், பள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்கப்படாது. சூழ்நிலையைப் பொறுத்து செப்டம்பர் 5ம் தேதி பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்யப்படும் என்றும் மம்தா தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் பெரும்பாலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பக்ரீத் போன்ற பண்டிகைகளும் சுதந்திர தினமும் சனிக்கிழமைகளில் நடப்பதால், அதற்கு பதிலாக வேறு ஒரு நாளில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,830 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேற்கு வங்கம் எடுத்துள்ள ஊரடங்கு முடிவின் தாக்கம் மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
**எழில்**�,