கல்லணை கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு!

public

மேட்டூர் அணை கடந்த மே மாதம் 24ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் கல்லணையை 27ஆம் தேதி வந்தடைந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு நேற்று (ஜூன் 6) கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இந்தத் தண்ணீர் கல்லணையை வந்தடைந்தவுடன் அங்கிருந்து பாசனத்துக்காக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பிரித்து விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே மே மாதத்தில் அணை திறக்கப்பட்டது. அதாவது கடந்த மாதம் 24ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் கல்லணையை 27ஆம் தேதி வந்தடைந்தது. ஆனால், கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் பிரித்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
கல்லணை கால்வாயில் மறு சீரமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு பாலப்பணிகள் நடைபெற்றதால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 14 நாட்கள் ஆகியும், கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் நாற்று கூட விடாமல் தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இந்த நிலையில் கல்லணை திறக்கப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு நேற்று கல்லணை கால்வயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கல்லணையிலிருந்து கல்லணை கால்வாயில் நேற்று காலை முதல் விநாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர், மாலையில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 250 கன அடி வீதமாக உயர்த்தப்பட்டது. மேலும், கல்லணைக் கால்வாயில் விடப்படும் தண்ணீர் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என நீர்வளத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *