ஈரோடு, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் தற்போது தண்ணீர் திறந்திருப்பது காவிரி தீர்ப்புக்கு எதிரானது என்றும் ஈரோட்டில் கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் நல்லசாமி கூறியுள்ளார்.
கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில், கீழ்பவானி பாசன பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார். கீழ்பவானி விவசாயிகள் சங்க தலைவர் செ.நல்லசாமி கலந்து கொண்டு பேசியபோது, “கீழ்பவானி பாசன திட்டம் ஒரு மழைநீர் அறுவடை திட்டம். நிலத்தடி நீர் செறிவூட்டுதலே இந்தத் திட்டத்தின் நோக்கம். கட்டப்பட்ட அணையும், வெட்டப்பட்ட கால்வாய்களும் மண்ணால் ஆனவை. விடப்படும் நீர் வீணாக கடலில் கலப்பதில்லை.
பல தரப்பட்ட பாசன திட்டங்களுக்கும், கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கைக்கு மாறாக இந்த கால்வாயை கான்கிரீட் கால்வாயாக மாற்றினால் திட்டத்தின் நோக்கம் பயனற்று போகும். சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படும். கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி எல்லையில் பனை விதை நடவு செய்ய வேண்டும். கடைக்கோடி வரை கால்வாய்களை தூர்வாருவதும், கரைகளை பலப்படுத்துவதுமே நிரந்தர தீர்வை பெற்றுத்தரும். இதை நிறைவேற்றிட பெரிய தொகை தேவையில்லை.
நடப்பு ஆண்டில் கோடையில் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி கொடிவேரி பாசனத்துக்கு 4.65 டிஎம்சிக்கு பதிலாக 8.5 டி.எம்.சிக்கான அரசு ஆணையை வெளியிட்டு தண்ணீர் திறந்திருப்பது காவிரி தீர்ப்புக்கு எதிரானது. தவறான நீர் நிர்வாகத்தால் இதுவரை கீழ்பவானி பாசனத்தில் 16 போகம் கடலை சாகுபடியும், 8 போகம் நெல் சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
**-ராஜ்**
.