Pரிலாக்ஸ் டைம்: தர்பூசணி அல்வா!

Published On:

| By Balaji

கோடைக்காலம் வந்துவிட்டால் தெருவுக்கொரு தர்பூசணிக்கடை முளைத்துவிடும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்துக்குள் தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருப்பார்கள். கண்ணைக் கவரும் இதன் ரத்தச் சிவப்பு நிறம், நம்மையறியாமலேயே நம்மைக் கடையை நோக்கி இழுத்துவிடும். தற்போதைய கொரோனா சூழலில் முழு தர்பூசணியை வீட்டுக்கு வாங்கி வந்து சுவைப்பதே நல்லது. கோடைக்கு இதமளிக்கும் தர்பூசணியை அப்படியே சாப்பிடலாம் என்றாலும் சற்று வித்தியாசமாக அனைவருக்கும் ஏற்றவகையில் அல்வா செய்தும் சாப்பிடலாம். ரிலாக்ஸ் டைமைப் புத்துணர்ச்சியுடன் கொண்டாடலாம்.

**எப்படிச் செய்வது?**

நன்கு பழுத்த ஒரு தர்பூசணி பழத்தைத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு கூழாக்கிக்கொள்ளவும். பத்து பாதாம், ஐந்து முந்திரியை மெல்லிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அரை கிலோ வெல்லத்தைப் பொடித்து தண்ணீரில் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சிக்கொள்ளவும். பாகு பதத்துக்கு வந்ததும் அரைத்த தர்பூசணி கூழ், கால் கப் தேங்காய்ப் பால் ஊற்றி வேக வைக்கவும். அவ்வப்போது சிறிதளவு நெய் ஊற்றி கிளறவும். அல்வா பதத்துக்கு வந்ததும் நறுக்கிய முந்திரி, பாதாம், சிறிதளவு ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். பின்னர் ஆறியதும் துண்டுகளாக நறுக்கி அல்வாவை சுவைக்கலாம்.

**சிறப்பு**

தர்பூசணியில் 90% அளவுக்கு நீர் உள்ளது. கோடைக்காலங்களில் இதைச் சாப்பிட்டால் நீரிழப்பு (Dehydration) பிரச்சினைகள் ஏற்படாது. நடுத்தர வயதினரின் உயர் ரத்த அழுத்தத்தைத் தர்பூசணி குறைக்கும். தமனிகள் சிறப்பாகச் செயல்படவும் உதவும். தர்பூசணியில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். காயங்களை விரைவாக குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share