ஜனவரி 1ஆம் தேதி முதல் குடிநீர் கேன் விலை அதிகரிப்பதாக ரெட்ஹில்ஸ் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தக்காளி, கத்திரிக்காய், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடும் உயர்வை கண்டுள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,நகரங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் குடிநீர் கேன் விலை அதிகரிக்கவுள்ளதாக வெளியான செய்தி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் ரெட் ஹில்ஸைச் சேர்ந்த குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடைக்கப்பட்ட குடிநீர் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஊதிய உயர்வால், 300 மில்லி, 500 மில்லி, ஒரு லிட்டர், 2 லிட்டர் மற்றும் 5 லிட்டர் பாக்ஸ்களின் மீது புத்தாண்டு முதல் ரூ. 10 விலை உயர்த்தப்படும். 20 லிட்டர் கேன் ஃபில்லிங் மீது இரண்டு ரூபாய் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினால் மற்ற பகுதி உற்பத்தியாளர்களும், கேன் விற்பனை செய்யும் விநியோகஸ்தர்களும், கடைக்காரர்களும் விலையை உயர்த்துவார்கள் என்பதால் மக்கள் மிகவும் கவலைக்குள்ளாகினர்.
**-வினிதா**
�,