n
சென்னையில் இருந்து தேனி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று பெருங்களத்தூரில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக அதிலிருந்த அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
நேற்று (பிப்ரவரி 15) இரவு 7.30 மணியளவில் ஜாய் ஆம்னி என்ற தனியார் பேருந்து, தேனி மாவட்டம் கம்பம் செல்வதற்காக சென்னை அடையாறிலிருந்து புறப்பட்டது. 35 பயணிகளுடன் இந்த பேருந்து கோயம்பேடு வழியாக மதுரவாயல், தாம்பரம் பைபாஸ் சாலையில் சென்றது.
இரவு 10.05 மணிக்கு பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை அருகே இரும்புலியூர் பாலத்தில் சென்றபோது, திடீரென பேருந்தில் இருந்த ஹெட்லைட் வயர்கள் கருகி தீப்பிடித்தது. இதனால் பேருந்துக்குள் கடும்புகை உருவானது. இதனால், உடனடியாகப் பேருந்தை நிறுத்தினார் ஓட்டுநர். கதவு மற்றும் அவசரகால வழிகளை திறந்து, உடனடியாகப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அடுத்த சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இது தொடர்பாக தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெள்ளி, சனிக்கிழமைகளில் வழக்கமாக இச்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இந்நிலையில், தீவிபத்து ஏற்பட்டதால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேருந்தில் மின்கசிவு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் மற்றும் பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.�,