lசிவாஜி குறித்த சர்ச்சை: விவேக் விளக்கம்!

Published On:

| By Balaji

பிகில் இசை வெளியீட்டு விழாவில் விவேக் பேசிய கருத்துக்களுக்கு சிவாஜி சமூகநலப் பேரவை நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், விவேக் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகிவரும் பிகில் திரைப்படம் தீபாவளிப் பண்டிகைக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நீண்ட நாட்களுக்குப் பின் விஜய்யுடன் இப்படத்தில் இணைந்து நடித்துள்ள விவேக், இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார். அதில், சிவாஜி கணேசன் நடிப்பில் ’இரும்புத்திரை’ என்ற படம் வெளியானது. அதில் ஒரு பாடல் ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்று ஆரம்பிக்கும். ஆனால் அந்தக் காலத்தில் இப்பாடலுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அந்த வசனம் தற்போது நடிகர் விஜய்யால் பிரபலமாகியுள்ளது” என்று பேசினார் விவேக்.

விஜய் எந்த விழா மேடையில் பேசினாலும், ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்று பேச்சைத் தொடங்குவது வழக்கம். பிகில் படத்தில் இடம்பெற்றுள்ள *வெறித்தனம்* என்ற பாடலும் ‘நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்’ என்று தான் தொடங்குகிறது. சமீபத்தில் வெளியான இப்பாடல் வைரல் ஹிட்டாகியுள்ளது.

விவேக் இதனைக் குறிப்பிட்டு பேசினாலும், சிவாஜி குறித்த இந்த ஒப்பீடு, சிவாஜி கணேசனை அவமரியாதை செய்வது போல அமைந்ததென்று சிவாஜி கணேசனின் ரசிகர்கள் கோபமடைந்தனர். இதற்கு சிவாஜி சமூகநலப் பேரவை கடும் கண்டனம் விடுத்து நேற்று(செப்டம்பர் 24) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

**சிவாஜி சமூகநலப் பேரவையின் கண்டன அறிக்கை**

‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக், 1960ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜி – வைஜெயந்தி மாலா நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்று தொடங்கும் அருமையான பாடலைக் கிண்டலடித்திருக்கிறார்.

மேடை கிடைத்துவிட்டால், கூட்டத்தைப் பார்த்துவிட்டால் சிலர் உளற ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வரிசையில் நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். எந்த நடிகரை வேண்டுமானாலும் தூக்கி வைத்துக் கொண்டாடுங்கள், எந்த இசையமைப்பாளர் அல்லது பாடலை வேண்டுமானால் பாராட்டுங்கள் தவறில்லை. ஆனால், ஒரு நடிகரைக் காக்காய் பிடிப்பதற்காக ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ஒரு பாடலைக் கிண்டலடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏதோ இப்போது தான் அந்தப் பாடல் மக்களுக்கே தெரிய வருவது போலக் கூறியுள்ளார். ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற 1960-ல் வெளிவந்த பாடல் மிகவும் வரவேற்பைப் பெறவில்லை என்றால் ஏன் அதே டியூனை மீண்டும் பயன்படுத்த வேண்டும் எனக் கூறத் தயாரா? டியூனுக்கு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக, பிரபலமான டியூன் என்பதாலேயே அதனைக் காப்பியடித்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் பேசியிருக்கிறார் விவேக்.

ஏற்கெனவே ஒரு திரைப்படத்தில் ‘பராசக்தி’ படத்தில் வரும் நீதிமன்றக் காட்சி வசனத்தைப் பேசிக் கிண்டலடித்திருந்தார் விவேக்.

இப்போது சிவாஜியின் அருமையான பாடலைப் பொது மேடையில் விவேக் கிண்டலடித்திருக்கிறார். இது போலத் தொடர்ந்து செய்தால், அவருக்கெதிராக ரசிகர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

**விவேக் விளக்கம்**

இந்நிலையில், நடிகர் விவேக் இன்று(செப்டம்பர் 25) காலை தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

“1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க.”

இவ்வாறு விவேக் விளக்கமளித்துள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share