Rவிராட் கோலிக்கு பீட்டா விருது!

Published On:

| By Balaji

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் விருதை பீட்டா அமைப்பு வழங்குகிறது.

31 வயதான இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஐசிசி தரவரிசைப்பட்டியலில் ஒருநாள் போட்டிகளில் உலகின் நெ.1 பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். ஆடுகளத்தில் ஆக்ரோஷமாக விளையாடுவது, எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்குவது என கோலியின் ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து வந்து ரசிகர்களுக்கு பீட்டா அமைப்பு மற்றொரு முகத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

விலங்குகள் நல அமைப்பான பீட்டா, 2019ஆம் ஆண்டின் *சிறந்த மனிதர்* என்ற விருதுக்கு விராட் கோலியை தேர்வு செய்துள்ளது. இந்த விருது விரைவில் வழங்கப்படவிருக்கிறது.

இந்த விருது தொடர்பாக பீட்டா இந்தியா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “விலங்குகள் மீதும் அளவற்ற பாசமும், நேசமும் விராட் கோலி வைத்துள்ளார். சமீபத்தில் அமர் கோட்டையில் ஒரு யானையை 8 பேர் கொண்ட குழு துன்புறுத்தியதைப் பார்த்த விராட் கோலி, உடனடியாக பீட்டா அமைப்பைத் தொடர்பு கொண்டு பேசினார்.

இதுதொடர்பாக கடிதமும் எழுதி விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கக் கோரினார். இதையடுத்து மால்டி நகர போலீஸார் உதவியுடன் அமர் கோட்டையில் இருந்த அந்த யானை மீட்கப்பட்டது. விலங்குகள் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் தவறு செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பெங்களூருவில் ஏராளமான நாய்கள் உரிமையாளர்களால் கைவிடப்பட்டும், சாலையில் அனாதையாகக் காயத்துடன் இருக்கும். நாய்களுக்கு வசிப்பிடம் அமைக்கக் கோலி உதவினார். மேலும், தனது ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்து, நாய்களைத் தத்தெடுத்து வளர்க்கவும் அறிவுறுத்தினார்.

விராட் கோலியின் அறிவுரையை ஏற்று அவரின் ரசிகர்கள் அனாதையான நாய்களுக்கு வசிப்பிடத்தை வழங்கியும், சிலர் தத்தெடுத்தும் வளர்க்கத் தொடங்கினார்கள். இதனை கருத்தில் கொண்டு விலங்குகள் நலனின் மீது ஆர்வமாக இருக்கும் விராட் கோலிக்கு 2019ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது பீட்டா சார்பில் வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் விராட் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

**இதற்கு முன் இவ்விருதை வென்ற பிரபலங்கள்**

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.பனிக்கர் ராதாகிருஷ்ணன், நடிகர்கள் ஆர்.மாதவன், அனுஷ்கா சர்மா, சன்னி லியோன், சோனம் கபூர், கபில் சர்மா, ஹேமமாலினி, ஜாக்குலின் பெர்னாண்டஸ்.

பீட்டா இந்தியா இயக்குநரும், மக்கள் தொடர்பு அதிகாரியுமான சச்சின் பங்கேரா விராட் கோலிக்கு விருது வழங்கப்பட்டதைப் பற்றி கூறுகையில், “விலங்குகள் மீது தீவிரமான காதலும், அன்பும் வைத்துள்ள விராட் கோலி, விலங்குகள் மீதான கொடுமைகளை எந்த சூழலிலும் தட்டிக் கேட்கக்கூடியவர், போராடக் கூடியவர். விராட் கோலியின் செயலை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். விலங்குகள் நலனில் அக்கறை கொள்ள பீட்டா இந்தியா வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்தார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share