�மூன்று மாதங்களாக வைகை அணையில் நீடிக்கும் நீர்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி!

Published On:

| By admin

நீர்வரத்து தொடர்ந்து இருப்பதால் கடந்த மூன்று மாதங்களாக வைகை அணை நீர்மட்டம் 69 அடியிலேயே நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட ஐந்து மாவட்டங்களில் பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணை இதுவரை இல்லாத வகையில் கடந்த ஆண்டில் மூன்று முறை நிரம்பியது.
அணையில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இது தவிர உசிலம்பட்டி பகுதி கண்மாய்களுக்கு மூன்று மாதங்களாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மட்டுமே வைகை அணைக்கு தொடர் நீர்வரத்தாக உள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 69.08 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 317 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 219 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டபோதும், போதுமான நீர்வரத்து இருந்ததால் அணை நீர்மட்டம் குறையவே இல்லை.
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் தற்போது வரை மூன்று மாதங்களாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 69 அடியில் நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணையின் நீர்மட்டம் குறையாமல் இருப்பதால் கோடையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share