ாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள உள்ளூர் தயாரிப்புகளான கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரிதும் உதவி வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த நிலையில், நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைக் கட்டணம் செலுத்தியே போட்டு கொள்ள முடியும் என கூறப்படுகிறது.
நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் கோவேக்சின் தடுப்பூசி ஒரு டோஸின் விலை 1,200 ரூபாயாகவும், கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸின் விலை 600 ரூபாயாகவும் இருந்தது. இந்த நிலையில், இரு தடுப்பூசி டோஸ்களின் விலையும், பாதிக்கும் மேலாக குறைக்கப்பட்டு 225 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை சீரம் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனாவல்லா மற்றும் பாரத் பயோடெக்கின் துணை நிறுவனர் சுசித்ரா எல்லா தங்களது ட்விட்டரில் அறிவித்துள்ளனர்.
மத்திய அரசுடன் ஆலோசனைக்குப் பின்னர் இந்த அதிரடி கட்டண குறைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் பலவும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி கட்டாயம் என கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள சூழலில், அரசால் சரியான தருணத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
.