உங்கள் வீட்டுக்குள் காற்று.சூரிய ஒளி வந்திருக்கிறதா?

Published On:

| By Balaji

நகரங்களில், மாநகரங்களில் வாழ்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சில தகவல்களைக் கூறியிருக்கிறார்.

அரசியல்வாதிகள் என்றாலே சர்ச்சைப் பேச்சுகள், புகார் பேட்டிகள் என்பதைத் தாண்டி அவர்களின் பேச்சில் பல நல்ல விஷயங்களும் பொதிந்து கிடக்கின்றன.

அப்படித்தான்… ‘நகர்ப்புற திட்டமிடுதல் மற்றும் புவியியலுக்கான பாடப்புத்தகம்’ என்னும் தலைப்பிலான புத்தகம் ஒன்றை காணொலி மூலம் ஹைதராபாத்தில் நேற்று (ஜனவரி 20) வெளியிட்டார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா.

இந்திய பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் சமீர் சர்மா இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர்,

“நவீன வாழ்க்கைமுறைக்கான ஆசையில் நகரங்களில் வாழ்பவர்கள் இயற்கையுடனான தங்களது தொடர்பை பல நேரங்களில் இழந்து விடுகின்றனர். சூரிய ஒளி கூட நமது வீடுகளுக்குள் வருவதில்லை என்பது வருத்தமானது. நவீன கட்டிடங்கள் இயற்கையோடு ஒன்றி இருக்குமாறு வடிவமைக்கும் படி நகர வடிவமைப்பாளர்கள் மற்றும் திட்டமிடல் அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்.

பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் மைதானங்கள் போன்ற வசதிகள் நகரங்களில் இருக்க வேண்டும். கட்டிடங்கள் நெருக்கமாக அமைந்திருக்கும் நகர்ப்புறப் பகுதிகள் வெள்ளப்பெருக்குக்கான காரணங்களில் ஒன்று” என்று கூறினார்.

மேலும், “மாநகரம் என்பது ஒரு சிலருக்கானது மட்டுமே அல்ல. நகரங்களில் வாழும் நிறைய ஏழைகள் நகரங்களின் வளர்ச்சி திட்டங்களில் விடுபட்டு போகின்றனர். நகர திட்டமிடுதலில் இன்றியமையா பாகமாக அனைவரையும் சேர்க்க வேண்டும்.

நகர்ப்புற வசதிகளுக்கான நிதி, பசுமை கட்டிடங்களை ஊக்குவித்தல், கழிவுகளை மறுசுழற்சி செய்தல், மழைநீரை சேமித்தல் மற்றும் பொதுப் போக்குவரத்தை ஊக்கப்படுத்துதல் போன்ற நகர திட்டமிடலின் ஒவ்வொரு பகுதியும் நீண்ட காலம் நிலைத்திருக்குமாறு திட்டமிடப்பட வேண்டும்” என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார்.

”நமது உடல்நலனுக்கு நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் முக்கியம் என்பதை கொரோனா நமக்கு கற்று கொடுத்துள்ளது. காற்று புகாத இடங்களில் வாழும் பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். வீடுகள், அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் கூட்ட அரங்குகளில் முறையான காற்றோட்ட வசதிகள் செய்யப்பட வேண்டும்” என்பதே இந்த புத்தக வெளியீட்டு விழாவின் செய்தி என்றார் வெங்கையா.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share