Qதனியார் ரயிலில் பணிப்பெண்கள்!

Published On:

| By Balaji

இந்தியாவில் ரயில் சேவையைத் தனியார் மயமாக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. முதல்கட்டமாகத் தனியார் மூலம் இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் சேவையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (அக்டோபர் 4) தொடங்கி வைத்தார். விமானத்தைப் போல பணிபெண்கள் சேவை உட்பட அனைத்து வசதிகளும் இந்த ரயிலில் பயணிகளுக்காக ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

லக்னோ டெல்லி இடையே இயக்கப்படும் இந்த ரயில் ரயில்வேயின் ஒரு அங்கமாக இருக்கும் ஐஆர்சிடிசியால் இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வேயின் 166 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக இன்று தனியார் மூலம் விரைவு ரயில் இயக்கப்பட்டது.

வாரத்தில் ஆறு நாட்கள் லக்னோ முதல் டெல்லி வரை இயக்கப்படும் இந்த ரயிலானது, லக்னோவிலிருந்து காலை 6.10 மணிக்குப் புறப்பட்டு டெல்லி ரயில் நிலையத்தை நண்பகல் 12.25 மணிக்கு வந்தடையும். ஏறக்குறைய 6.15 நிமிடங்களில் டெல்லியை அடையும். இடையில் கான்பூர், காஜியாபாத் ஆகிய இரு இடங்களில் மட்டுமே நின்று செல்லும். டெல்லியிலிருந்து மாலை 3.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 10.05 மணிக்கு லக்னோ வந்தடையும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ரயிலின் எக்ஸிக்யூடிவ் ஏசி கார் சேர் கோச்சுக்கு ரூ.2,450ம், ஏசி சேர் கார் கோச்சுக்கு ரூ. 1,280ம் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு எக்ஸிக்யூடிவ் கோச்சில் 56 பேரும், ஏசி கோச்சில் 78 பேரும் பயணிக்கலாம். இந்த ரயில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

டெல்லி-லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸைப் பொறுத்தவரை, ஐஆர்சிடிசி டாக்ஸி வாடகை, ஹோட்டல் முன்பதிவு போன்ற வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. ரயில் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடும் வழங்கப்படும். ஒரு மணி நேரத்துக்கு ரூ.100ம், இரண்டு மணி நேரத்துக்கு ரூ.250ம் வழங்கப்படும்.

இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை இலவச பயண காப்பீடு வழங்கப்படும். பயணிகளின் உடமைகளை அவர்களது வீட்டிலிருந்து எடுத்து வருவதும், மீண்டும் கொண்டு சேர்க்கும் பணியையும் ஐஆர்சிடிசி வழங்கவுள்ளது.

ரயில் சேவை ஊழியர்களால் உணவு வழங்கப்படும், ஆர்.ஓ தண்ணீர் வழங்கப்படும். டீ, காபி தயாரிக்கும் இயந்திரங்கள் ரயில் பெட்டியில் வைக்கப்படும் சொகுசு வசதிகளான இருக்கை முன் எல்சிடி தொலைக்காட்சி, படிப்பதற்கு வசதியாக மின்விளக்குகள், செல்போன் சார்ஜ் வசதி, கண்காணிப்பு கேமரா என்பன உட்பட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன.

இதுதவிர கால் பட்டனை அழுத்தினால், சேவை ஊழியர்கள் வந்து பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவார்கள். இதற்காக விமானத்தைப் போல பணிப்பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். க்ரூவ் சர்வீஸ்க்காக தனியாக நேர்காணல் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share