கடன் சுமை காரணமாக தமிழக அரசு திவாலாகும் நிலையில் உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 30ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே நேற்று(ஆகஸ்ட் 21) நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். மருத்துவர் ராமதாஸ் நிகழ்ச்சியில் பேசுகையில், “தென் பெண்ணை ஆற்றைப் பாலாற்றுடன் சேர்க்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. ஆனால், அதை ஆட்சியாளர்கள் நிறைவேற்ற மாட்டார்கள். ஏனென்றால் ஆற்றில் தண்ணீர் வந்தால் மணல் அள்ள முடியாது. ஆட்சியாளர்களுக்கு பணம் கொடுப்பது மணல் தான்.
பாலாற்றில் வெள்ளைக்காரன் காலத்தில் கட்டிய ஒரே ஒரு தடுப்பணை தான் உள்ளது. பாலாற்றில் எப்போதும் தண்ணீர் செல்ல வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். தோல் கழிவுகளை பாலாற்றில் விட்டு பாழாக்கி விட்டனர். பாலாற்றில் எப்போதும் தண்ணீர் ஓட வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
ஒரு சொட்டு சாராயம் கூட தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. மதுவை ஒழிக்க வேண்டும். பெண்கள் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும்.
வளர்ச்சியைத் தடுப்பது ஊழல். இப்போது நடைபெறுவது ஊழல் ஆட்சி. அன்புமணி முதல்வராக வந்தால் தான் ஊழல் இல்லாத ஆட்சி இருக்கும். தமிழ்நாட்டிற்கு நிறைய திட்டங்கள் வைத்துள்ளார். வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ஒரு கோடி பேருக்கு வேலை வழங்க உள்ளார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மழைநீர் கூட கடலுக்கு செல்லாது. அதை அமல்படுத்த வேண்டும் என்றால் வாக்காளர் மனது வைக்க வேண்டும்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. பணம் வாங்க மாட்டோம் என வாக்காளர்கள் நினைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
50 ஆண்டுகள் ஆட்சி செய்த 2 திராவிட கட்சிகளும் தமிழ்நாட்டை நாசம் செய்து விட்டன என்று குற்றம் சாட்டிய அவர், “தமிழ்நாட்டை மத்திய அரசு ஆட்டுவிக்கிறது. பினாமி அரசு ஆடுகிறது.
இன்னும் கொஞ்சம் நாளில் தமிழ்நாடு திவாலாகும். ரூ.10 லட்சம் கோடி வரை கடன் உள்ளது. ஒவ்வொரு தனி மனிதன் தலையிலும் ஒரு லட்சம் ரூபாய் கடன் உள்ளது. ஒரு நாளைக்கு ரூ.170 கோடி வட்டி கட்டுகின்றனர். இந்த அரசு தேவையா?, மாற்றம் வர வேண்டும். மாணவர்கள், படித்தவர்கள், பெண்கள் நினைத்தால் இந்த மாற்றத்தைக் கொண்டுவர முடியும்” என்று பேசினார்.�,