சென்னை சொத்துப் பதிவு அலுவலகத்தில் 11 மாதங்களில் ரூ.10,000 கோடி வசூலாகியுள்ளது.
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளைப் பதிவுக்கு உட்படுத்தும் விதமாக சமீபத்தில் ஒப்புதல் பெறப்படாத வீடுகளுக்கான பதிவுத் திட்டம் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சொத்துப் பதிவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல, சொத்து பரிமாற்றங்களுக்கான ஆன்லைன் பதிவுக்கும் STAR 2.1 என்ற சேவை சென்ற ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் மொத்தம் 23.10 லட்சம் ஆவணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னை சொத்துப் பதிவு அலுவலகத்துக்கு ரூ.10,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட சொத்துப் பதிவில் சென்னை அதிக வருவாய் ஈட்டியுள்ளது. ஒட்டுமொத்த சொத்துப் பதிவு வருவாயில் சென்னையின் பங்களிப்பு 40 சதவிகிதமாக இருக்கிறது. 2017-18 நிதியாண்டை விட இந்த ஆண்டில் 15 சதவிகிதம் கூடுதலான ஆவணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், சொத்துப் பதிவு வருவாய் 22 சதவிகிதம் கூடுதலான அளவில் கிடைத்துள்ளதாகவும், சொத்துப் பதிவுத் துறை அதிகாரி ஒருவர் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டில் சொத்துப் பதிவுத் துறை ரூ.9,121 கோடி வருவாய் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.�,