�கொரோனாவின் அதிரடி தாக்கத்துக்கு எதிராகச் செயல்படுவது நோய் எதிர்ப்பு சக்தி உணவுகளே என்று கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தச் சுவையான சோளம் துவரை மசாலா கிரேவியைச் செய்து சாப்பிடுங்கள். துவரையில் உள்ள வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கும்.
**என்ன தேவை?**
இளம் சோளக்கதிர் – ஒன்று
தோலுரித்த துவரைக்காய் – 100 கிராம்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு (தோல் சீவி நறுக்கவும்),
பூண்டுப் பல் – 2 (தோலுரித்தது)
கசகசா – ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று
சோம்பு – ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் – 100 மில்லி
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.
**எப்படிச் செய்வது?**
சோளத்தை உதிர்த்து துவரையும் சேர்த்து உப்பு சேர்த்து குக்கரில் போட்டு தண்ணீர்விட்டு இரண்டு விசில்விட்டு இறக்கவும். இஞ்சி, பூண்டு, கசகசா, பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், சோம்பு, தேங்காய்த் துருவலை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸான விழுதாக அரைக்கவும். இதை வேகவைத்த சோளம், துவரையுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். கீழே இறக்கி தேங்காய்ப்பால் விட்டு கலக்கவும். கொத்தமல்லி தூவி இறக்கவும். சப்பாத்தி, தோசை, பிரெட்டுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
[நேற்றைய ரெசிப்பி: மொச்சைப் பொரியல்](https://minnambalam.com/k/2020/04/16/3)�,