‘நான் அதிபரானால் எச்-1பி விசாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வேன்’ என்று ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு, பிற நாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள், பணியாளர்கள் அதிக அளவில் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ‘அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே’ என்ற கோஷத்தை முன்வைத்து வரும் ட்ரம்ப், கடந்த ஜூன் 23ஆம் தேதி நடப்பு ஆண்டு இறுதி வரை எச்-1பி உட்பட பணிகள் தொடர்பான அனைத்து விசாக்களையும் நிறுத்திவைப்பதாக அறிவித்தார். ட்ரம்பின் இந்த அறிவிப்பால் இந்திய தொழில்நுட்பப் பணியாளர்கள் அங்கு பணியாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், ‘நான் அதிபராக தேர்வானால் எச்-1பி விசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்வேன்’ என்று ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். டிஜிட்டல் முறையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஜோ பிடன், “எச்-1பி விசாவை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். ஆனால், எனது நிர்வாகத்தில் அது இருக்காது” என்றார்.
“வழக்கமான தேர்தல் வாக்குறுதியாக இது இருக்காது” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர், அமெரிக்காவில் உள்ள இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையினர்.
**-ராஜ்**�,