கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மணல் கடத்தலைத் தடுக்க திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் பள்ளங்கள் தோண்டி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் விரைந்து சென்று தென்பெண்ணை ஆற்றில் எந்தெந்த பகுதிகளில் இருந்து மணல் கடத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்தார்.
பின்னர் மணல் கடத்தப்படும் பகுதியில் உள்ள ஆற்றின் கரையோரம் தனது சொந்த செலவில் பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய அளவில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மணல் கடத்துவதற்காக பொக்லைன் எந்திரம், லாரிகள், மாட்டு வண்டிகள் ஆற்றுக்குள் செல்வது தடுக்கப்படும்.
மேலும், மணல் கடத்தல் நடைபெறுவது தெரியவந்தால் உடனடியாக தகவல் தரும்படியும், அவர்களின் பெயர் ரகசியமாக காக்கப்படுவதோடு, உரிய சன்மானமும் வழங்கப்படும் என கிராம மக்களுக்கு அறிவுரை வழங்கி இருப்பதாக சப்-இன்ஸ்பெக்டா் சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
**-ராஜ்-**
,