nபோக்குவரத்துக் கழகம் ரூ.1 கோடி வரி பாக்கி!

Published On:

| By admin

உடுமலையில் அரசு போக்குவரத்துக் கழகம், நகராட்சிக்குக் கட்டவேண்டிய வரி நிலுவைத் தொகை பல ஆண்டுகளாக கட்டப்படாததால், குடிநீர் இணைப்பைத் துண்டிக்க சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே பைபாஸ் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளது. இங்கு டிரைவர்கள், கண்டக்டர்கள், பணியாளர்கள் என 550-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களது சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தொழில் வரி பிடித்தம் செய்து நகராட்சிக்குச் செலுத்த வேண்டும்.
ஆனால், இவர்களுக்கு சம்பளம் பட்டியலிடும் தலைமை அலுவலகத்தில் இருந்து இவர்களது சம்பளத்தில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பிடித்தம் செய்யப்பட்ட தொழில் வரி 2015ஆம் ஆண்டு முதல் நகராட்சிக்குச் செலுத்தாமல் ரூ.90 லட்சம் நிலுவை உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ.3 லட்சம் மட்டும் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் 2010ஆம் ஆண்டு முதல் சொத்து வரி கட்டாமல் ரூ.18 லட்சம் நிலுவை உள்ளதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கான குடிநீர் கட்டணமாக சுமார் ரூ.27,000 நிலுவை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் வரியினங்களாக நகராட்சிக்குக் கட்டவேண்டிய தொகை சுமார் ரூ.1 கோடியே 5 லட்சம் நிலுவை உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வரிகளை நகராட்சிக்குக் கட்டும்படி அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உடுமலை நகராட்சி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், வரி நிலுவைத் தொகை வசூலாகாததால், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கான குடிநீர் குழாய் இணைப்பைத் துண்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நேற்று நகராட்சி ஆணையாளர் பி.சத்தியநாதன் உத்தரவின்பேரில் உடுமலை நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் எம்.சக்திவேல், கே.கலீல் ரஹ்மான் மற்றும் பணியாளர்கள் அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்குச் சென்றனர்.
அங்கு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு முன்பு, பைபாஸ் சாலைப் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பைத் துண்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அரசு போக்குவரத்துக் கழக டிரைவர்கள், கண்டக்டர்கள், “எங்களது சம்பளத்தில் இருந்து தொழில் வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. நிலுவைத் தொகை குறித்து நிர்வாகத்திடம் கேளுங்கள். குடிநீர் குழாய் இணைப்பைத் துண்டித்தால் நாங்கள் குடிநீருக்கு என்ன செய்வது” என்று கேட்டும், குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்தும் வாக்குவாதம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழக உடுமலை கிளை மேலாளர் சந்திரன் அங்கு வந்து உயரதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் பேசினார். இதைத்தொடர்ந்து குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை நடைபெறவில்லை. அத்துடன் நகராட்சி அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த வரியினங்களை கட்டுவதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel