கொடைக்கானல் மயிலாடும்பாறை அருகே சுற்றுலாப் பயணிகள் வந்த வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியிலிருந்து பெண்கள்,குழந்தைகள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் இன்று கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்தனர்.
அப்போது கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் மயிலாடும்பாறை அருகே வந்து கொண்டிருந்த சுற்றுலா வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. வேனின் கியர் பாக்ஸ் பழுதானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தை நேரில் பார்த்த அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சுற்றுலாப் பயணிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்குக் காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதில், 10 நபர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் 5 க்கும் மேற்பட்டோருக்கு பலத்தகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இவ்விபத்து காரணமாக மயிலாடும்பாறை அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பரபரப்பும் நிலவியது,
கொடைக்கானலில் தற்போது அதிகமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் படையெடுத்து வருகின்றனர். வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாகவும், கவனத்துடன்,மிதமான வேகத்தில் மலைச்சாலையில் பயணிக்குமாறு காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.