h
கொரோனா ஊரடங்கால் திருப்பதியில் பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டாலும், ஆன்லைனில் இ-உண்டியல் மூலம் ஏப்ரல் மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் ரூ.1.97 கோடி வசூலாகியுள்ளது.
மூன்றாம் கட்ட ஊரடங்குக்குப் பின்னர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மேலும் ஊரடங்கு 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருப்பதியில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. 31ஆம் தேதிக்குப் பின்னர் தளர்வுகளை வழங்கியபின் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
திருப்பதி கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டாலும், தேவஸ்தான உறுப்பினர்கள், முக்கிய ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் தரிசனம் பெற்று வருகின்றனர். அவ்வாறு தரிசனம் மூலம் தினசரி 10,000, 20,000 ரூபாய் என உண்டியல் வசூலாகி வருகிறது.
திருப்பதியில் நேரடியாக உண்டியலில் செலுத்தும் முறை தவிர
ஆன்லைனில் இ-உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை பணம் செலுத்தும் முறையும் உள்ளது.
அவ்வாறு பக்தர்கள் ஏப்ரல் மாதத்தில் செலுத்திய பணம் ரூ.1.97 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.1.79 கோடி வசூலாகியிருந்தது. இந்த ஆண்டு ரூ. 18 லட்சம் கூடுதலாக வசூலாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கில் பக்தர்கள் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாத நிலையில் இ-உண்டியல் மூலம் பக்தர்கள் பணம் செலுத்தி வருகின்றனர்.�,