நெல்லை – குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்த வெள்ளம்: நீடிக்கும் கனமழை!

Published On:

| By Balaji

திருநெல்வேலியில் பெய்து வரும் கன மழை காரணமாக, தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்புப் படையினர் மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

தூத்துக்குடி, நெல்லை ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணியில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.

தாமிரபரணி ஆற்றுக்கு 32,858 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர். வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்ததால், பாதிக்கப்பட்டவர்களை படகுகள் மூலம் தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டு வருகின்றனர்.

அண்ணாநகர், குறுக்குத்துறை உள்ளிட்ட தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கால்நடைகளையும் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். தலா 25 பேர் அடங்கிய இரு தேசிய பேரிடர் மீட்புக் குழு தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை ஜங்ஷன், மீனாட்சிபுரம், வண்ணாரப்பேட்டை சாலை தெரு ஆகிய பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாலத்தீவு மற்றும் குமரிக் கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்குத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share