தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் பிரசித்தி பெற்ற கோயில்கள் மூடப்படுகின்றன.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தைத் தாண்டி செல்கிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து செல்வதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சை மாவட்டத்தில் தொற்று தீவிரமாக இருப்பதால், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுகிறது என்றும், அதனால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலின் பிரதான நுழைவுவாயிலான மராட்டா நுழைவுவாயில் முன்பு இரும்பு கதவு அடைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டுள்ளது. அதனால், இன்று வழக்கம்போல கோயிலுக்கு வந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் திரும்பி அனுப்பப்பட்டனர்.
பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், கோயிலுக்குள் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று, கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், நாமக்கல் நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் கோயில், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயில்களும் மூடப்பட்டுள்ளன.
அதுபோன்று, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருமுக்கூடல், தென்னேரி உள்ளிட்ட ஏழு பகுதிகளில் அமைந்துள்ள புராதான திருக்கோயில்கள் அனைத்தும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வரும் மே மாதம் 15ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நாடு முழுவதும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்கள் மூடப்பட்டுள்ளன.
**வினிதா**
�,