`கண்காணிக்கப்படும் டாஸ்மாக் கடைகள்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் 5,300க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. தற்போது ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், மாவட்டம்தோறும் 30 சதவிகிதத்துக்கும் மேல் விற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர், “டாஸ்மாக் கடைகள் கூடுதல் நேரம் செயல்படாமல் தடுக்க மாவட்டம்தோறும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். உத்தரவை மீறி கூடுதல் நேரம் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், 30 சதவிகிதத்துக்கும் மேல் விற்பனை நடைபெறும் கடைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மதுரை, சேலம், திருச்சி மண்டலங்களில் விற்பனை அதிகமாக நடப்பதாக தெரிகிறது. அதிகபட்சம் ரூ.1 லட்சம் விற்பனையாகும் கடையில் ரூ.1.30 லட்சம் வரையில் மட்டுமே விற்பனை நடைபெறலாம். விற்பனை அதிகம் நடைபெற்றால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட கடை பணியாளர்களிடம் விளக்கம் கேட்கப்படும்” என்றவர்,

மேலும், “தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கூலிங் பீர் விற்பனை அதிகமாக நடக்கிறது. இதனாலேயும் விற்பனை அதிகரிப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர். சரியான காரணங்கள் இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இல்லை என்றால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட மேலாளர் தலைமையிலான அதிகாரிகள் இந்தக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது. விற்பனை செய்யும் மதுபானங்களுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும். வேட்பாளர்கள் வழங்கும் டோக்கன்களை வைத்து விற்பனை நடைபெறுகிறதா என்பதையும் கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் கமி‌ஷன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இனி தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்குவதற்குக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் தினமும் ஒரு நபருக்கு இரண்டு ‘புல்’ மதுபாட்டில்கள் மட்டுமே வழங்கப்படும். அதற்கு மேல் கிடையாது. புல் மதுபாட்டில்கள் கிடைக்கவில்லை என்றால் நான்கு ‘ஆப்’ மதுபாட்டில்களை வாங்கிக்கொள்ளலாம். அதுவும் கிடைக்கவில்லை என்றால் எட்டு ‘குவாட்டர்’ மதுபாட்டில்களை வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் உள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் இதுதொடர்பான தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share